ரஷ்ய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பேஸ்-புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பேஸ்-புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்ய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளது.
எனினும், ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் தனியாளாக ஈடுகொடுத்து வருகிறது.
இதுவரை 20 இலட்சத்திற்கும் கூடுதலானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதேபோன்று விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட பல துறைகளிலும், ரஷ்யாவுக்கு எதிரான தடையை பல நாடுகள் விதித்து வருகின்றன.
இதனால், ரஷிய விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். அமேசான் உள்பட பல வணிக நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.