ராஜபக்சக்கள் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் பொதுப் பணத்தை மோசடி செய்ததாகவும், வேறு நாடுகளில் முறைகேடான சொத்துக்கள் வைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகளால் இவை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ‘எங்களிடம் லம்போர்கினி கார்கள், தங்கக் குதிரைகள், 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் பிற நாடுகளில் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் இருப்பதாக 2015ஆம் ஆண்டுக்கு முன் கூறினர்.
அவர்கள் அதை விசாரித்தும் அவர்கள் கூறியது போல் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அதே பொய்யை உருவாக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் நாமல் குற்றம் சாட்டினார்.
இதேவேளை ஆதாரம் இருந்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த அவர், எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடந்த 12 வருடங்களாக தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், எந்தவொரு கணக்காய்வுச் செயற்பாடுகளையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.