காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் நியூஸ் நவ் செய்தி தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் கண்டங்களை தெரிவித்துக் கொள்வதோடு கறுப்பு தினமாக பதியப்பட்டுள்ளது.
எனினும் இதனையடுத்து நேற்று மாலை 4 மணி முதல் கல்வி, சுகாதாரம், தபால், வங்கி, மின்சாரம், நீர் போன்ற அனைத்து துறைகளும் பணிபுறக்கணிப்பு ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் பல அசௌகரியங்களை சந்திக்கநேரிடும், அதற்காக நாம் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்காவிட்டால் எமது இந்த அரசாங்கத்தை வெளியேற்ற முடியாமல் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்கவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கமும் நேற்று நள்ளிரவு முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொண்டது.
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு ஈடுபடவுள்ளன. நள்ளிரவு 12 மணிமுதல் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காலை அலரி மாளிகை வளாகத்தில் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டிருந்த மக்களை தாக்கியிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் இயங்கிவரும் பல்வேறு துறைசார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் கூட இலங்கையை முழுமையாக முடக்கி தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.