சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடியது.
இதன்போது, நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உணவு வழங்குபவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச மருந்து கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்தி நிறுவனம், சுதேச மருந்து மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தனியார் வைத்தியசாலை சங்கங்கள் மற்றும் மருந்து இறக்குமதியாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.