மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் ‘மாஸ்டர்’ சிவலிங்கம் நேற்று காலமாகியுள்ளார்.
இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமும் நேரடியாகவும் சுவையாகக் கதைகள் சொல்லியும் பத்திரிகைகளில் சிறுவர் கதைகள் எழுதியும் பிஞ்சுப் பருவத்தினரை ஈர்த்து வைத்திருந்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, 1970 களில் ‘ சிந்தாமணி ‘ பத்திரிகையில் சிறுவருக்கான தொடர் கதைகளையும் இவர் எழுதினார்.
இலங்கையில் சிறுவர்களுக்கு கதைக் கூறுவதில் விசேட திறமையினை கொண்டிருந்த இவர் 50 ஆண்டுகளாக சிறுவர் கதைகள் சொல்லும் பணியையே அவர் தொழிலாகக் கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் கதை சொல்லும் கலைஞனாகவும் பணியாற்றியிருந்தார். இவர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மஞ்சந்தொடுவாய் என்ற ஊரில் இரத்தினம் ஆசிரியருக்கும், செல்லத்தங்கம் என்பவருக்கும் 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்தார்.
சென்னை சந்தனு கலைக்கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூன் கலையும், வில்லிசைக் கலையும் படித்திருக்கிறார். புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை இவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த சரவணமுத்து மாமாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அன்றில் இருந்து இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்தார். பின்னர் இலங்கைத் தொலைக்காட்சியிலும் இவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கொழும்பில் இருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
கலைத்துறையில் பல்வேறு சாதனைகள் , சேவைகள் புரிந்து மட்டக்களப்பு மண்ணின் புகழை உலக அளவில் கொண்டு சென்ற பெருமை இவரை சாரும் குழந்தைகள் முதல் பெரியோர்வரை சிவலிங்கம் மாமா என்றால் அறியாதோர் யாரும் இல்லை.
இவரது, இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று நடைபெற்றது.