ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றுள்ளார்.
சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்த போதும், அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர், இறுதி நேரத்திலேயே சஜித் பிரேமதாச கடிதம் அனுப்பியிருந்தார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஓமல்பே சோபித தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் 30,000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தனது ஆசனத்தை இழந்தார். தனது கட்சி வெற்றி பெற்ற ஒரே ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், தற்போது அவர் 6வது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.