அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பேப் தியாவ் (Pape Thiaw) ஆன்மீகம் மற்றும் கடமை குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நியூ ஜெர்சி மாகாணத்தில் கடுமையான காற்று வீசியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அணியின் வீரர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், செனகல் அணியினர் தொழுகைக்காக வெளியே சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், “இன்று நியூ ஜெர்சியில் பலத்த காற்று வீசியது, உங்கள் பாதுகாப்பைக் கருதி வெளியே வர வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் கேட்டுக்கொண்டனர். அப்படியிருந்தும் நீங்கள் ஏன் தொழுகைக்காக வெளியே சென்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பயிற்சியாளர் பேப் தியாவ், செய்தியாளரின் கேள்வியை விடாப்பிடியாகவும் அழுத்தமாகவும் எதிர்கொண்டார்:
“தொழுகையை விட முக்கியமான ஒன்று உலகில் இருக்கிறதா? இது உங்களுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட கேள்வி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் காற்றைக் கண்டு பயப்படுகிறீர்கள், ஆனால் நாங்களோ அந்த காற்றைப் படைத்த இறைவனுக்குப் பயப்படுகிறோம். நாம் இங்கு ஒரு பொழுதுபோக்கு விளையாட்டிற்காக வந்திருக்கிறோம். ஆனால், நாம் இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டோம்.”
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்:
“இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகவே இருந்து, அதில் நாங்கள் விளையாடுவதாக இருந்தாலும் சரி, வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக நாங்கள் மைதானத்தை விட்டு வெளியேறியே தீருவோம். அதற்காக உலகக்கோப்பையை இழக்க நேரிட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. எனவே, எங்களது மதக் கடமைகள் மற்றும் வழிபாடுகள் குறித்து எங்களிடம் கேள்வி எழுப்ப வேண்டாம்.”
விளையாட்டு, புகழ், உலகக்கோப்பை என அனைத்தையும் விட தனது மதக் கடமைகளுக்கும் இறைவனுக்கும் முக்கியத்துவம் அளித்துப் பேசிய பாபே தியாவின் இந்தத் துணிச்சலான பேச்சு, தற்போது உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
