லிட்ரோ சமையல் எரிவாயு தற்போது வீட்டு உபயோகத்திற்காக கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு கிடைக்காது, மேலும் தொழில்துறை நோக்கங்களுக்காகவும் தொழிற்சாலைகளுக்கும் மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு 3,500 எரிவாயு ஏற்றுமதிகளை கொள்வனவு செய்வதற்கு இன்று 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எரிவாயு பற்றாக்குறையால் நேற்றையதினம் கொழும்பில் மக்கள் பல்வேறு பகுதிகளிலும் வீதிகளை மூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று கொழும்பு ஆர்மர் வீதியில் எரிவாயு வழங்குமாறு கோரி வீதி மறியலில் ஈடுபட்ட சிலர், எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இன்றையதினமும் எரிவாயு வழங்கக் கோரி காலை முதல் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.