(File Photo)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்க மயானத்திலுள்ள தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களைஎவ்வித இடையூறுமின்றி அருகில் சென்று தரிசிப்பதற்கும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இரண்டு பேருக்கு மாத்திரம் வழஙகப்பட்டிருந்த அனுமதிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாளை (8) வரை இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ‘நிவ்ஸ் நவ்’ ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த அனுமதி மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேவேளை அடக்கத்தலத்தின் அருகில் செல்வதற்கு அடக்கம் செய்யும் போது வழங்கப்பட்ட துண்டுச்சீட்டை கொண்டு வருமாறு வேண்டப்பட்டுள்ளதுடன், குறித்த மையவாடியினைப் பார்வையிடுவதில் சில கட்டுப்பாடுகளும் பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அண்மையில் கொவிட் -19 தொற்றினால் மரணித்த தனது தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஜ்மா நகர் மையவாடியினைத் தரிசிப்பதற்கு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் அங்கு வருகை தந்த போது பெருமளவான மக்கள் தமது உறவினர்களின் அடக்கஸ்தலங்களைத் தரிசிப்பதற்கும், பிராத்தனைகளில் ஈடுபடுவதற்கும் செல்வதற்காக பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியை வேண்டி அங்கு கூடி நிற்பதனை அவதானித்ததாக குறிப்பிட்டார்.
நோன்புப் பெருநாள் தினம் என்ற அடிப்படையிலும் மக்களின் சிரமங்களை கருத்திற் கொண்டும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மற்றும் ஓட்டமாவடி கொவிட் -19 ஜனாஸா நல்லடக்க குழுவின் சிவில் சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.ஹலால்தீன் ஆகியோர் எடுத்துக்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாக இந்த அனுமதி சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 காரணமாக மரணித்த வர்களை தமது பிரதேசங்களில் அடக்கம் செய்வதற்குள்ள விஞ்ஞானபூர்வமான காரணங்களையும் மீறி அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதன் காரணமாக 3000 க்கும் மேற்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னரே தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.