ஜூன் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலை இலங்கையில் நிலவும் நிதிப் பிரச்சினை மற்றும் வங்கிகளின் தரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைக்கு வரவழைக்க முடியவில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் ஊடாக வழங்கப்பட்ட கடனுதவி கடிதங்கள் மூலம் கடந்த நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நீண்ட காலமாக இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்து வரும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தொகையை 735 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இதன்காரணமாக இலங்கைக்கு நீண்ட காலமாக எரிபொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் புதிய சப்ளையர்களை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, இலங்கைக்கு எரிபொருள் வழங்க முன்வந்த ஒரு சப்ளையரிடமிருந்து பல எரிபொருள் கலன்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, இலங்கையில் அரச வங்கியொன்றின் ஊடாக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்ட போதும், அதற்கு பொறுப்பான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் எரிபொருள் கொள்வனவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்தியா உட்பட பல நிதி நிறுவனங்களின் ஊடாக பணிபுரிந்த பின்னர் குறித்த சப்ளையரிடமிருந்து எரிபொருள் தாங்கிகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதன்படி முதலாவது பெற்றோல் தாங்கி இம்மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு வரும் எனவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், உள்ளூர் வங்கி நிறுவனங்களின் சர்வதேச தரமதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்து வருதல் போன்ற காரணங்களால் எரிபொருள் தாங்கி வருவதற்கு முன்னர் சப்ளையர் பணத்தைத் திரும்பக் கோரியதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் எரிபொருள் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் போதியளவு கையிருப்பு இல்லை எனவும் தற்போதுள்ள இருப்புக்கள் பொது போக்குவரத்து மின் உற்பத்தி மற்றும் தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.