3,724 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை தாமதமாகியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த கப்பல் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கப்பல் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதிக்காக உலக வங்கிக்கும் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த எரிவாயு ஏற்றுமதி நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் ஜூலை 11ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக சமையல் எரிவாயு வழங்கப்படாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதுடன் வரிசையிலும் காத்துக்கொண்டிருந்தமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.