பாரம்பரிய அரசியலை விட்டு அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து நேற்று (ஜூலை 30) விசேட உரையொன்றின் போதே இதனைத் தெரிவித்தார்.
இதன்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கமே சிறந்த வழி என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ‘பாசிச பயங்கரவாதத்திற்கு’ முகம் கொடுத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வீடுகள் மற்றும் புத்தகங்களை எரிப்பது ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒன்று என்று அவர் கூறினார்.
ரணிலை வீட்டுக்குப் போகச் சொல்லி ஆர்ப்பாட்ட பேரணி நடத்துவதாக சிலர் கூறுகின்றனர். தயவு செய்து அதை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன்.
எனக்கு போக வீடு இல்லை. நீங்கள் தயாராக இருந்தால், ஒரு பெரிய கூட்டத்தை வரவழைத்து 6 மாதங்களுக்கு என் வீட்டைக் கட்டுங்கள்.
அதன்பின்பு வீட்டைக் கட்டிவிட்டு ‘ரணில் வீட்டுக்குப் போ’ என்று சொல்லி எனது வீட்டைக் கடந்து செல்லுங்கள்.
இல்லாவிட்டால் வீடற்றவனை வீட்டுக்குப் போகச் சொல்லிப் பயனில்லை. இது வெறும் நேர விரயம். அன்றைக்கு செய்த வேலையை அதுதான் அழித்துவிடும்.
எனவே இரண்டில் ஒன்று. நாட்டை கட்டியெழுப்புங்கள்அல்லது என் வீட்டைக் கட்டுங்கள். ஆனால் ரணிலை வீட்டுக்குப் போகச் சொல்லாதீர்கள் என்றார்.