இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரம் 39 வருடங்களிற்கு முன்னர், 1983ம் ஆண்டில், இதே ஜூலை மாதத்தில் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
அதுமட்டுமில்லாது 1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தில், 3000 பேர் கற்பழித்து, எரிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர், 8000 கடைகள் அழிக்கப்பட்டன, 150,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர், – 500,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறினர்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு இராணுவத்தினர் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது.
ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.
இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம் என்றே கூறப்படுகின்றது.
நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.
பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.
இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே தமிழ் மக்களால் கருதப்படுகிறது.
(மூலம்:பிபிசி)