பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தொடர்பாக அந்நாட்டில் பொலிஸ் விசாரணை தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குறித்த வாக்குமூலமானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறியுள்ளதாக பொலிஸ் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே கூடி இது தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இம்ரான் கான் பாகிஸ்தான் அரசையும் இராணுவத்தையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளன.
அதேநேரம், இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.