காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேநேரம், ராகுல் குறித்து குறைகளை தெரிவித்து 5 பக்க கடிதத்தை சோனியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் சோனியா கவலை அடைந்துள்ளார்.
லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.
கட்சியில் அனைத்து நிலைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்.
இதையடுத்து, ‘ஜி – 23’ என்றழைக்கப்படும் இந்த அதிருப்தி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கட்சிக்கு நிரந்தர தலைமையை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ், தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக, அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
இதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 5 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கட்சியில் சேர்ந்தது முதல் தனது பணி, செயல்பாடுகள், முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் பணியாற்றியது குறித்தும் விளக்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுலின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரின் குழந்தைத்தனமான செயல்பாடுகளே 2014 தேர்தல் தோல்விக்கு காரணம் எனக்கூறியுள்ளார்.
இதேவேளை கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 20ம் திகதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் செயற்குழு ஆன்லைன் மூலம் நடக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.