ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதற்கமைய றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயேச்சைக் குழுவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டன.
ஒவ்வொரு கட்சியினதும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பல பாராளுமன்ற இடைக்கால குழுக்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
அதேநேரம் தேசிய சபையொன்றை நிறுவுவதே தமது முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும், ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்களுக்கு சமமான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்படும் எனவும், தேவைப்படும் போது அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்திலோ அல்லது குழு அடிப்படையிலான அமைப்பிலோ இணைந்து கொள்வதாயின் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் தமது தீர்மானத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.