நிலவும் மழையுடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலை காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மழை சுமார் 100 மி.மீ கனமழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மலையக பிரதேசங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வாழும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் அவதானமாக இருக்குமாறும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.