பல தசாப்தங்களாக அடக்கு முறையாளர்களின் ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள எகிப்து சுமார் 7500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறையும் நாகரிகத்தையும் கொண்ட ஒரு தேசமாகும்.
வரலாற்றுக் காலம் முதலே அதன் மக்கள் தொகையில் ஆகக் கூடுதலானவர்கள் எழுத்தறிவு உள்ளவர்களாகவும் காணப்பட்டனர்.
ஆனால் இன்று அதன் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்புக்கு வந்துள்ளது. உடனடியான மாற்று நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 105 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் குழப்பநிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
கடந்த பல ஆண்டுகளாகவே எகிப்து பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
மித மிஞ்சிய ஊழலும், தவறான பொருளாதார முகாமைத்துவமும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
சவூதி அரேபிய சர்வாதிகார ஆட்சியாளர்களின் பூரண ஆதரவுடன் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலின் கொடூரமான அடக்குமுறைக்கு அந்த நாடு முகம் கொடுக்க நேர்ந்ததே இந்நிலைக்கு பிரதான காரணமாகும். இதற்கு மேலதிகமாக யுக்ரேனின் இன்றைய யுத்த நிலையும் எகிப்தின் பொருளாதாரத்தை மோசமாகப்பாதித்துள்ளது.
எகிப்து அதன் பிரதான உணவான கோதுமையின் இறக்குமதிக்குபெரும்பாலும் யுக்ரேனிலேயே தங்கி உள்ளது.
பத்தி எழுத்தாளர் யஹ்யா ஹேமட் தெரிவித்துள்ள கருத்தின் படி கடந்த பெப்பரவரியில் ரஷ்யா எகிப்தின் மீது படையெடுத்தது முதல் கோதுமை இறக்குமதிக்காக யுக்ரேனில் தங்கியிருக்கும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் எதிர் நோக்கக் கூடியஆபத்துக்கள் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக எகிப்து பற்றி பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஆனால் எகிப்தின் சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாகவும் அவரின் சர்வதேச ஆதரவாளர்களின் குறுகிய நோக்கங்கள் காரணமாகவும்.
எகிப்தின் பொருளாதாரம் பாரிய அழிவை சந்திக்க நேர்ந்தது. தற்போது யுக்ரேன் யுத்தம்இந்த நிலைமையின் முகத்திரையை நீக்கி யதார்த்தத்தை புலப்படுத்தி உள்ளது.
இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் அல் சிசி சர்வதேச நாணய நிதியத்துடன் சேர்ந்து எகிப்தை ஒரு முதலீட்டு மையமாக விற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மூலம் வசதி படைத்தவர்கள் தமது பைகளை நிறப்பிக் கொண்டனர் ஆனால் சாதாரண அப்பாவி மக்கள் வாழ வழியின்றி தமது வாழ்வாதாரங்களை இழந்து அன்றாடம் தவிக்கின்றனர்.
எகிப்து திவாலான அல்லது வங்குரோத்தான ஒரு நாடாக மாறுவதற்கு இன்னும் சில
மாதங்களே உள்ளன. தற்போதுள்ள 30 சதவீத வறுமை நிலை விரைவில் பன்மடங்கு
பெருகி பட்டினி நிலை ஏற்படக் கூடும்.
எகிப்தின் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது தவிக்கின்றன. குழப்ப நிலையில் இருந்தும் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் இருந்தும் நாட்டைக் காப்பாற்றுவதற்கான காலம் கடந்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.
நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆதிகரித்துக் காணப்படும் கடன் சுமை, வழங்கப்பட்ட நிதிகள் அரச தரப்பால் திட்டங்கள் என்ற பெயரில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை என்பன பற்றி அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் எகிப்தின் பொருளாதாரம் எதிர்நோக்கி உள்ள யதார்த்த நிலை, அதனால் ஏற்படக் கூடிய சமூக அமைதியின்மை, வன்முறைகள் மற்றும் சட்ட விரோத குடிப்பெயர்வு என்பன பற்றி எச்சரிக்கைகளையும் அனுப்பி உள்ளனர்.
விடுக்கப்பட்ட ஒவ்வொரு எச்சரிக்கையும் அமைதியாக அல்லது அவமானத்துடன் எதிர் கொள்ளப்பட்டது.
சிசியினதும் அவரது கைக் கூலிகளினதும் ஒன்பது வருட கால மோசமான முறையற்ற ஆட்சியின் விளைவே இது என பல பத்தி எழுத்தாளர்கள்
சுட்டிக்காட்டி உள்ளனர்.
நீதித்துறையின் முழுமையான கட்டுப்பாட்டையும் அவர்கள் கொண்டிருந்ததன் விளைவாக அதிருப்தியாளர்களின் குரல்களை எல்லாம் ஒரு ஒழுங்கு முறையின் கீழ் அடக்கி ஆழ முடிந்தது.
இதனால் 60000க்கும் அதிகமான அரசியல் கைதிகள் முறைகேடான விதத்தில் சட்டத்துக்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தனது நாட்டை சுரண்டுவதந்கு தேவையான எல்லா ஆதரவும் சிசியின் வெளிநாட்டு ஆதரவாளர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.
எகிப்து தொடங்கிய மிகப் பெரிய திட்டமான எத்தியோப்பிய மறுமலர்ச்சி அணை பூர்த்தி செய்யப்படும் போது தான் மிக மோசமான விளைவகளை எகிப்து சந்திக்க உள்ளது.
2015ல் எகிப்து நைல் நதி மீதான அதன் வரலாற்று ரீதியான உரிமையை விட்டுக் கொடுத்தது. இந்த நாசகார முடிவானது சுமார் 7000 ஆண்டுகள் பழமையான சிவில் நாகரிகத்தின் கட்டமைப்பை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளது.
இன்றைய பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளி பட்டினி மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பனவற்றை ஏற்படுத்தி வன்முறைகளுக்கும் வழியமைக்கக் கூடும்.
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய தண்ணீர் நெருக்கடியானது பண்டைய நாகரிகத்துக்கு பேர் போன எகிப்தின் இருப்பையே ஆபத்துக்கு இட்டுச் செல்லும்.
சிசி தன்னோடு சேர்த்து தனது நாட்டையும் அதள பாதாளத்துக்குள் தள்ளி உள்ளார். இதில் இருந்து அந்த நாடு எப்படி மீண்டு வரும் என்பது தான் இனி எஞ்சியுள்ள கேள்வி.
ஏகிப்துக்கு இப்போது தேவைப்படுவது அவசரமான ஒரு உயிர் காப்புத் திட்டம்.
மேற்குலகம் எப்போதுமே தனது நலன்களைப் பேணுவதற்காக ஏனைய நாடுகளின்
சர்வாதிகாரிகளையே ஆதரித்து வந்துள்ளது.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டத்தை சிசியின் ஆதரவாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
இதனால் எகிப்தின் முக்கிய மதச்சார்பற்ற செயற்பாட்டாளர் அலா அப்த் அல் பத்தாஹ் சிறையில் மெல்ல மெல்ல மரணத்தை தழுவ விடப்பட்டபோதும் அவர்கள் மௌனம் காத்தனர்.
எல்லா நேரங்களிலும் இஸ்லாம் மட்டும் தான் அது பெரும்பான்மையாகக் கோலோச்சும் முஸ்லிம் நாட்டிலேயே போராட்டத்தை சந்தித்தது என்பதல்ல இதன் கருத்து.
மாறாக ஜனநாயத்துக்கு எதிராகவும் அங்கு போராட வேண்டி இருந்தது. இருப்பினும் சிசியும் அவரது வளைகுடா சகாக்களும் இந்த விடயத்தில் தோற்றுப் போயுள்ளனர் என்றே பலரும் இப்போது நம்புகின்றனர்.
“ஆட்சி இப்போது நொறுங்கும் நிலைக்கு வந்துள்ளது. தம்மை விட அல்லது தமது
நலன்களை விட, தமது அரசியல் கண்ணோட்டங்களை விட ஒரு பெரிய திட்டத்தோடு தேசியவாத சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டிய காலம் கணிந்துள்ளது.
கடந்த காலத்தில் எம்மில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த மனக் கசப்புக்களை விட பெரியதாக எகிப்தை பாதுகாப்பதாக இந்தத் திட்டம் அமைய வேண்டும்.
அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். வறுமையில் வாடுபவர்கள் பட்டினியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
கடன்களில் பாதி இரத்துச் செய்யப்ப்டும் வகையில் அவை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீதித்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற தனக்கு சம்பந்தப்படாத சகல விடயங்களில் இருந்தும் இராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று பத்தி எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எத்தியோப்பிய அணைக்கட்டு விவகாரம் உயர் மட்ட அவசர பேச்சுவார்த்தைகளை
வேண்டி நிற்கின்றது. இதற்கு அரசியல் சக்திகள் ஓரணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
எகிப்தின் இருப்பே இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதிலிருந்து விடுபட புனிதமானதோர் அரசியல் கூட்டணி அவசியமாகின்றது.
பொதுவான பத்தி எழுத்தாளர்கள் தெரிவித்துள்ள கருத்தக்களின் படி எகிப்தின்
பொருளாதாரம் ஒரு மாயத்தன்மை மிக்க பொருளாதார மீற்சியை எதிர்நோக்கி உள்ளது.
அதற்குள் பெரிய ஏமாற்றமும் தங்கி உள்ளது. அதன் சிற்பிகளாக அப்துல்லாஹ் பத்தாஹ் அல் சிசியுடன் சர்வதேச நாணய நிதியமும் காணப்படுகின்றது.
பொது நிதிகள் தெடர்பான அரசாங்கத்தின் நீண்டகால தவறான முகாமைத்துவமும் ஒட்டு மொத்த அலட்சியமும் வெளிவாரியான கடன் சுமைகளை முன்னர் இருந்ததிலும் பார்க்க
ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன. எகிப்திய உள்நாட்டு நாணயமான பவுணின் பெறுமதி வீழ்ச்சி இதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த ஐந்தாண்டுகளில் பொதுக் கடன் இரு மடங்கிலும் அதிகாமாக பெருகி உள்ளது. இந்த நிலை இன்னும் எதிர்வு கூற முடியாத நீண்ட தோர் காலத்துக்கு நிலவும்.
அரசாங்கம் தற்போது அதன் வரவு செலவுத் திட்டத்தில் 38 வீத பங்கை வெறுமனே
ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்த ஒதுக்குகின்றது.
இவற்றோடு ஏனைய கடன்களையும் தவணைகளையும் சேர்க்கின்ற போது 58 வீதம் காலியாகி விடுகின்றது. இந்த நிலைமைகளை விளக்கி உள்ள முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராமி சாத் என்பவர் எகிப்து ஒரு அச்சத்துக்குரிய குடியரசு என வர்ணித்துள்ளார்.
பத்தி எழுத்தாளர்கள், புத்தி ஜீவிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட எகிப்திய மக்களும், இன்னும் பலரும் ஒரேவிதமான கருத்தினையே கொண்டுள்ளனர்.
அதுதான் சர்வாதிகாரமும் அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேல் மற்றும் சவூதியின் ஆதரவும் எகிப்தின் நலன்களுக்கு அப்பால் இஸ்ரேலின் நலன்களைப் பாதுகாக்க முனையும் இந்த சக்திகளின் போக்கும், நாட்டை சாபத்துக்கே இட்டுச் செல்லும் என்பதாகும்.
முன்னாள் சர்வதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அடக்குமுறை ஆட்சி, இஸ்ரேல் அதன் நிலைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், அரபிகளுடனான அதன் யுத்தங்களின் வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ளவும், அரபு மக்களை தொடர்ந்து கொடுமைகளுக்கு உற்படுத்தவும் தேவையான கால அவகாசத்தை வழங்கியது.
இஸ்ரேலுடன் தனது சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு முன்னாள் பலஸ்தீனத் தலைவர் யஸர் அரபாத்துக்கும் முபாரக் பெரும் நெருக்கடியை கொடுத்து வந்தார்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் பலஸ்தீனர்களுடன் எவ்வித சமாதானத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.
2010/ 11 அரபு வசன்த உதயத்தின் போது கொடுங்கோல் ஆட்சியாளர் முபாரக்கின் ஆட்சி வீழ்த்தப்பட்டது.
அதன் தொடராக 60 ஆண்டு காலப்பகுதியில் எகிப்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஜனநாயக ரீதியான தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் சார்பாக முஹம்மத் முர்ஷி மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் இதனால் விழிப்படைந்த அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகள் அங்கே இஸ்லாம் துளிர் விடுவதையும் ஜனநாயம் மலர்வதையும் முளையிலேயே நசுக்கும் பணியை மேற்கொண்டன.
அதன் முடிவாக இந்த தீய சக்திகளின் கூட்டு நடவடிக்கையால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஷியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்காக எகிப்துக்குள் செயற்கையான உணவு,
எரிபொருள மற்றும் அத்தியாவசிய பொருள்கள் மீதான பற்றாக்குறையை ஏற்படுத்த சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் குவைத் என்பன இணைந்து 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக பிற்காலத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு இராணுவ ஜெனரலான சிசி பதவியில் அமர்த்தப்படார். அன்று முதல் அவரை
விமர்சித்த பலர் ஈவு இரக்கமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி உள்ளனர் பலர் பலவந்தமாக காணாமல்
ஆக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அடக்குமுறைக்கு அஞ்சி புலம் பெயர்ந்துள்ளர்.