அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெறவுள்ளது.
சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, எச்.டி.ஜே. குலதுங்க, பி.பி.தஹாநாயக்க மற்றும் ஒன்பது பிரஜைகள் இது தொடர்பான மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தினால் தற்போதைய அரசியலமைப்பிற்கு முன்வைக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சமர்ப்பிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
அதன் சில சரத்துக்கள் தற்போதைய அரசாங்க அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றுவது அவசியமானால், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமாறும் மனுக்கள் மேலும் கோரியுள்ளன.