தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அகில இலங்கை தனியார் பஸ்கள் நேற்று 4 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஒரு பஸ்ஸிற்கு 40 லீற்றர் டீசல் மட்டுமே விநியோகம் செய்வது முற்றிலும் போதாது என தெரிவித்து மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதனால் அரச பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன. அரச பஸ்கள் போதியளவு சேவையில் ஈடுபடாமையால் மக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இன்றையதினம் அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் வீதிகளில் பஸ்களுக்காக காத்திருந்த வண்ணம் உள்ளனர். பலர் பல கிலோ மீற்றருக்கு நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டது. இந்நிலையில், பஸ் கட்டணத்தை குறைத்தும் எங்களால் நிம்மதியாக பஸ்ஸில் பயணிக்க முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அத்துடன் எரிபொருள் நெருக்கடியால் கியூ. ஆர். முறைமூலம் எரிபொருட்கள் பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களின் நலனுக்காக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமை மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.