ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் ஒக்டோபர் 2ம் திகதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ஆம் திகதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டார்.
மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல, அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.
உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் மாநிலத்தில் பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், வீடுகள் வண்டிகள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.