சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையின் திறமையான மற்றும் அரைகுறை திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போது 180,000 இலிருந்து 400,000 ஆக அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சவூதி தூதுவர் காலிட் பின் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி தெரிவித்தார்.
அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த தூதுவர் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த பின் இந்த விடயத்தை தெரிவித்தார்.
திறமையான இலங்கை பணியாளர்களுக்கு தனது நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே தனது முக்கிய பணியாக இருக்கும், நான் இலங்கையை நேசிக்கிறேன், உங்களது நாட்டிற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என அவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.
மேலும், பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவுமாறு புதிய தூதுவரை பிரதமர் குணவர்தன வலியுறுத்தினார்.
முதலீட்டுச் சபையின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டு வசதித் திட்டங்கள் இலங்கைக்கு அதிகமான சவூதி முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று பிரதமர் கூறினார்.
எரிசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் முதலீடு செய்ய சவுதி அரேபியாவுக்கு வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார். சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் புதுப்பிக்கப்பட்ட உதவித் திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் இலங்கைக்கான சவுதி ஏர்லைன்ஸ் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.