கோயில்கள், தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்தில் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத ஸ்தலங்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு நீண்டகால நிவாரணம் அளிக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், ஏனைய நிவாரண முறைகள் குறித்து கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத ஸ்தலங்களின் மின்சார கட்டணம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவைக்கு விளக்கமளித்ததாகவும், பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்களும் இது தொடர்பில் கருத்து தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.