மலையக வம்சாவளித் தமிழர்களை இலங்கை சமூகத்தில் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது குறித்து ஆராய அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
23 வருடங்களுக்கு முன்னர் காலமான சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக ஒக்டோபர் 30 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானினால் இந்த மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளிக்கப்பட்டது.
பெருந்தோட்டத்துறையில் உள்ள வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சு பொறுப்பேற்கும் அதேவேளை, பெருந்தோட்டத்துறையின் பாடசாலைகளின் அபிவிருத்தியை உறுதிசெய்ய தாம் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மலையகத்தில் உள்ள தமிழர்களுக்கு சொந்த காணிகளும் வாழ இடமும் இருக்க வேண்டும் என்பதாலேயே மலையகத்தில் உள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதையும் காணிகளை வழங்குவதையும் அரசாங்கம் தற்போது ஊக்குவித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும், கல்வியறிவு பெற்று பெருந்தோட்டப் பகுதிகளை விட்டு வெளியேறும் மக்களால் பாதிக்கப்படக்கூடிய பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்கள் கல்வியறிவு பெறுவதால், பெருந்தோட்டத் துறையை விட்டு வெளியேறும் மக்கள் அதிகம்.
அவர்களுக்கும் அதேபோன்று தமது பிரதேசங்களை விட்டு வெளியேறும் ஏனைய சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கம் வேலை தேடித் தர வேண்டும்.
எனவே, பெருந்தோட்டத் துறையில் தொடர்ந்தும் வாழக்கூடிய குழுக்களின் எதிர்காலம் குறித்தும், அவர்களை வாழ்வாதார நிலையில் வாழ அனுமதிக்க முடியாத நிலையில், பெருந்தோட்டப் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் அரசாங்கம் ஆராய வேண்டும்.
இலங்கையின் முழு இனப்பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வு காண்பதால், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் உணர்ந்து செயற்பட்டது போன்று மலையகத் தமிழ் மக்களுக்கும் நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்குப் போன்ற வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார்.
இலங்கைப் பிரஜாவுரிமையின் அனைத்துப் பலன்களும் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்களும் அனுபவிக்கப்படுவதை உறுதிசெய்யும் இந்த முயற்சியில் மலையகத் தமிழர்களின் அனைத்துத் தலைவர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மறைந்த தொண்டமான் ஆற்றிய சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, ஸ்ரீமா-சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பின்னர் ஒதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் அகிம்சை மூலம் குடியுரிமையைப் பெற்றுத் தந்த இலங்கையின் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் அவர் என்றும் கூறினார்.