ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 51வது மனித உரிமைகள் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படும் என சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் முன்னைய தீர்மானத்தில் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இம்முறை தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
20 உறுப்பு நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து விலகின. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும்.
பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
வாக்கெடுப்பின் போது இந்தியா, ஜப்பான், பிரேசில், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் தங்கள் கருத்தை தெரிவிக்கவில்லை.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல், வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சி, கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு இந்த நிலைமை பிரதான தடையாக மாறியுள்ளதாக தீர்மானம் குறிப்பிடுகிறது.
நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் ஊழல் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் போது அதற்கு காரணமான தற்போதைய மற்றும் முன்னாள் அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .