தற்போது நிலவும் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் நிலவுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, , பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரிவுகளில் மண்சரிவு அபாயம் அதிகம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த அபாய மாவட்டங்களில் வசிப்பவர்கள் மலைகள், சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலவும் மழை காலநிலை ஒக்டோபர் 15 ஆம் திகதியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.