இலங்கை பொலிஸில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக தரமான சுகாதார நிலையில் இல்லாத சுமார் 4,000 பொலிஸார் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
எனவே நீண்ட காலமாக தரம் வாய்ந்த சுகாதாரம் இல்லாத பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில் தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அமைச்சர் டிரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைவாக, மருத்துவ தரத்தை பூர்த்தி செய்யாத பொலிஸாரின் சேவையை நீக்குவது தொடர்பில் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பொலிஸ் சேவையில் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாத பல உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் அதனால் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து சிரமதான கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வருடத்தில் பெருமளவிலான பொலிஸார் ஓய்வு பெறவுள்ளதாகவும், எனவே இந்த வருடத்தில் சுமார் 16,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் குழு மேலும் கவனம் செலுத்தியது.