இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது.
உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரான் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதேவேளை, எதிரி நாடுகளான இஸ்ரேல், அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக ஈரான் அவ்வப்போது தங்கள் நாட்டை சேர்ந்த பலரை கைது செய்து வருகிறது.
கைது செய்யப்படுவர்களுக்கு மரண தண்டனை உள்பட கொடூர தண்டனைகளையும் விதித்து வருகிறது.