அண்மையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேருவதற்கு நாடு தழுவிய ரீதியில் தலிபான்கள் விதித்துள்ள தடைக்கு துருக்கியும் சவூதி அரேபியாவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு வியாழனன்று, தலிபான்களின் இந்நடவடிக்கையானது மனிதாபிமானம் அற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கூட்டு செய்தி மாநாட்டில் பேசிய அவர் தலிபான் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தினார்.
மேலும், ‘இஸ்லாமிய விளக்கம் உள்ளதா? மாறாக, நமது மதமான இஸ்லாம் கல்விக்கு எதிரானது அல்ல மாறாக, அது கல்வி மற்றும் அறிவியலை ஊக்குவிக்கிறது, பெண்கள் கல்வியில் என்ன முறைகேடு? இதனால் ஆப்கானிஸ்தானுக்கு என்ன தீங்கு? என்று கவுசோக்லு கேள்வியெழுப்பிள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்டது குறித்து வியப்பையும் வருத்தத்தையும் தெரிவித்தது.
அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையில் மத்தியஸ்தராக பணியாற்றிய கத்தாரும் இந்த முடிவை விமர்சித்துள்ளது.
அதேநேரம், இந்தத் தடைக்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் தெருக்களில் பெண்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல உயர்மட்ட கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் கான், பெண்கள் சமூகத்தின் அடித்தளம் என்று ட்வீட் செய்துள்ளார்.