சவூதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்தார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இதன்போது இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான எதிர்கால முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சவூதி அரேபியாவில் பயிற்றப்பட்ட பணியாளர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் இலங்கை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்குத் தொழிற்பயிற்சி நிலையமொன்றை உருவாக்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவுக்கு முன்மொழிந்ததாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.
சவூதி அரேபியா இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், அந்த நட்புறவை மேலும் விருத்திசெய்து கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.