60 வயதை கடந்த அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் சராசரியாக 18,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இம்முறை மாத்திரம் சுமார் 25,000 அரச ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அரச சேவையின் இயக்கத்தில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது, ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும், அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பயிற்சி முடித்தவர்களும் அரச சேவையில் இணைகின்றனர்.
குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்கு குறைந்த தரத்திலான தகுதி வாய்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இது தொடர்பான உத்தரவு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு அதிகாரமும் அவர்களை சேவையில் வைத்திருக்க முடிவு செய்யாவிட்டால், அரசியலமைப்பு அல்லது வேறு ஏதேனும் சட்டத்தால் கட்டாய ஓய்வுபெறும் வயது நிர்ணயிக்கப்பட்டவர்களைத் தவிர, பிற பொது அதிகாரிகள் அவர்கள் 60 வயதை அடையும் போது சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.