விபத்து மற்றும் அனர்த்தங்களுக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்காக, விமானத்தில் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடன் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா ஆகியோர் கடந்த 21ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனடிப்படையில் முக்கியாக திடீர் விபத்துகள் மற்றும் அனர்த்தங்களுக்குள்ளாகி அதன் காரணமாக மூளைச்சாவு அடைந்தவர்களின் பாதுகாவலர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அவர்களின் முக்கிய உடலுறுப்புக்களை பெறுவதற்காக விமானம் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவர்.
சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சி-130, அண்டனோ -32, எம்ஏ-60, வை -12, எம்ஐ-17, பெல்-412, பெல்-212 மற்றும் பெல்-206 ஆகிய விமானங்கள் இந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறுப்புகள் கொண்டு செல்லப்பட பயன்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் இலங்கை விமானப்படை வான் செயற்பாட்டுப்பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்க , விமானப்படை சட்ட பணிப்பாளர் எயார் கொமடோர் சுரேகா டயஸ் , மற்றும் விமானப்படை அதிகாரிகள், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ்,சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் அயந்தி கருணாரத்ன, பிரதம சட்ட அதிகாரி ஏ.ஆர்.அஹமட் மற்றும் வைத்திய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.