கட்டாரில் நடைபெற்று வரும் உலக்கிண்ண உதைபந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், அரையிறுதி போட்டிகளுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதவுள்ளது.
கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக்கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி போட்டிகளில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கிண்ணத்தை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.