வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட கடும் குளிரின் காரணமாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் கிட்டத்தட்ட 400 ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் சி. வசீகரன் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் அதிக அளவில் மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்தது இதுவே முதல் முறை என்றும் இதனால் உரிமையாளர்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மேலதிகமாக கோழிகள் மற்றும் நாய்கள் போன்ற சிறிய விலங்குகளும் கடும் குளிரால் உயிரிழந்துள்ளதாகவும், அவ்வாறான இறப்புகளின் எண்ணிக்கை இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை எனவும் வடமாகாண அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான கால்நடைகள் கடும் குளிரால் உயிரிழந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் 700 மாடுகள், 210 ஆடுகள், 210 மாடுகள், கிளிநொச்சியில் 30 ஆடுகள், 110 மாடுகள், 150 ஆடுகள் ஆகியவற்றின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வன விலங்குகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் காலநிலை தொடருமானால் விலங்குகளின் மரணம் அதிகரிக்கலாம் எனவும், கால்நடைகளை முடிந்தவரை வெப்பமான இடங்களில் வைக்குமாறும் வடமாகாண அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.