யாழ்.மாவட்டத்தில் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 157 வேட்பு மனுக்களில் 150 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு முழுமையாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் புதிய லங்கா நிதாஹஸ் பக்ஷயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.