தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07இல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன.
மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும்.
சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சி நிலையில் இருப்பதினால் மேற்படி நிகழ்வு ‘நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மகுடத்தில் இடம்பெறவுள்ளது.
சிங்கள மொழியின் இஸ்லாமிய தஃவா பணியாளர் மௌலவி அம்ஹர் ஹகம்தீன்,சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி ஆகியோருடன் பௌத்த, கிறிஸ்தவ மத குருக்களும் உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாளை காலை 6.15 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் சுதந்திர தின விழா நிகழ்வுகள் இடம்பெறும்.
வெளிவிவகார அலி சப்ரி அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதேநேரம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.இனால் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு 09, ஸ்ரீ வஜிரஞான மாவத்தை, இல. 63 இல் அமைந்துள்ள தலைமையகத்தில் இடம்பெறும்.
பல கலாச்சார மதத் தலைவர்களின் பங்கேற்புடன், கொடியேற்றத்துடன் விழாவைக் கொண்டாடப்படவுள்ளது.