எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு மற்றும் கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் என்பன அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை
நடைபெறவுள்ளது.
Rajarata EDU Network அமைப்பானது பண்பட்ட சமூகத்தை நோக்கி (Towards a Moral Society) என்ற கல்வியின் பிரதான அடைவை தனது இலக்காகக் கொண்டு அனுராதபுர மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் மாபெரும் கல்வி புரட்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
மாவட்டத்தின் சகல முஸ்லிம் ஊர்களிலும் கல்வி எழுச்சிக்கான வாசல்கள் திறக்கப்பட்டு, அதற்கான சூழல் கட்டமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சமூகமயப்படுத்தும் முயற்சிகளில் Rajarata EDU Network தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது.
ஒழுக்கமுள்ள சமூக உருவாக்கத்திற்கான அடிப்படைகளை ஆழமாக விளக்கிச் செல்லும் இந்நூல் குடும்ப வாழ்க்கை, கணவன்-மனைவி உறவாடல், பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் பொறுப்புகள் என்பவற்றுக்கான பல்வேறு நடைமுறைச் சாத்தியமான சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் இஸ்லாமிய நோக்கிலும் நவீன உளவியல், சமூகவியல் கோட்பாடுகளின் பின்புலத்திலும் முன்வைத்துள்ளதோடு, அவற்றை எமது வாழ்வில் கட்டங்கட்டமாக அமுலாக்கம் செய்வதற்கான பயிற்சித் திட்டத்தையும் வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்
வட மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவுகக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. அப்துஸ் ஸமத் (நளீமி, SLEAS-1) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.