நாடளாவிய ரீதியில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று முன்தினம் (30) ‘தேசிய இளைஞர் தைப் பொங்கல்’ தின விழா கொச்சிக்கடை பொன்னாம்பலானேஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, நகர இளைஞர் மாவட்ட வாரியம், இளைஞர் சங்க கூட்டமைப்பு மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 400 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு, சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், பொங்கல் சாதம் தயாரித்தல், இந்து சமய சடங்குகளை செய்தல், கோலம் வரைதல் போன்ற அனைத்து இந்து சமய சடங்குகளையும் கண்டுகளிப்பதற்கும் உரையாடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரன் டி சில்வா, பணிப்பாளர் (அபிவிருத்தி) மஞ்சுள விதானாராச்சி, பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் பயிற்சி) ரஷித தெலபொல, பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்) ஜகத் லியனகே, பிரதிப் பணிப்பாளர் பிரியந்த ஜயரத்ன, மாநாட்டுச் செயலாளர் தரிது நவின் உள்ளிட்ட பணிக்குழுவினர் பங்கேற்றனர்.