‘தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டியைக் கோருவதானது பெரும்பான்மையின மக்களை தூண்டிவிடும்’

Date:

நீண்ட காலமாக நீடித்துவரும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தையின் ஊடாக சிறந்த தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு பல தடவைகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்றும் அவர் தனது உரையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கொரோனா காலத்திலும் சரி, அதற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போதும் சரி, நாம் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஒன்றரை வருடங்களாக நாம் இதற்காக பேச்சும் நடத்தினோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் நாம் பேச்சு நடத்தினோம்.

எனினும், ஆளும் தரப்பினரின் அழுத்தங்களினால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. நாம் இப்போதும் சர்வக்கட்சி அரசாங்கமொன்றுக்கு ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளோம்.

நேற்றைய தினம் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். 13 தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தற்போது சமூகத்தில் எழுந்துள்ளன.

87 களில் வடக்கு அரசியல்வாதியான சிவசிதம்பரம், இந்தியாவுக்கு சென்று, இலங்கை அரசாங்கத்தினால் வடக்கிற்கு அநீதிகள் இழைக்கப்படுவதாக தெரிவித்ததையடுத்து தான், பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்து- லங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டதோடு, அப்போதைய பிரதமர் பிரேமதாஸவும், பெரும்பாலான அமைச்சர்களும் அந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, புலிகள் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என்றும் ஜே.வி.பியினர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ளார்கள் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில்தான், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டியைக் கோருவதானது, பெரும்பான்மையின மக்களையும், பௌத்த பிக்குகளையும் தூண்டிவிடும் செயலாகவே நாம் பார்க்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 13ஐ தருவதாக ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனுக்கு உறுதியளித்தார். பசில் ராஜபக்ஷவும் இந்தியாவுக்கு 13ஐ  தருவதாக உறுதியளித்தார்.

இவ்வாறான உறுதி மொழிகளுக்குப் பின்னர்தான், இந்தப் பிரச்சினை நாட்டின் பூதாகரமானது.  87களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும், மாகாணசபை முறைமை வெற்றியா – தோல்வியா என ஆராயவில்லை.

நீண்ட காலமாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினைக்கு, வடக்கு – கிழக்கு – தெற்கு அரசியல்வாதிகள், புத்திஜீவகளை, மதகுருமார்களை ஒன்றிணைத்து சமாதானமானதொரு தீர்வை வழங்க வேண்டும்.

இதைவிட பாரிய பிரச்சினைகள் உலக நாடுகளில் ஏற்பட்டபோது, பேச்சுவார்த்தைகளின் ஊடாக அவை தீர்க்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.

எனவே, இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தையின் ஊடாக நிச்சயமாக தீர்க்கலாம் என நாம் உறுதியாக நம்புகிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டை புனரமைக்க சர்வகட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவேன்.

கடந்த ஆண்டு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்மொழிந்த முதல் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த ஒன்றரை வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தெரிவித்த சிறிசேன கடந்த 18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...