சவூதி அரேபியாவில் பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண், சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரருடன் விண்வெளி ஆய்வுக்காக பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கடந்த ஆண்டு ‘விஷன் 2030 என்னும் விண்வெளித் திட்டத்தை சவூதி அரேபியா அரசு தொடங்கியது. தற்போது குறுகிய-நீண்ட விண்வெளிப் பயணங்களுக்காக வீரர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் இந்த முயற்சியில் அந்நாடு இறங்கியது.
அதன் ஒரு பகுதியாக விண்வெளி திட்டத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக 2019ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது.
இதன் மூலம் விண்வெளி மனிதர்களை அனுப்பிய முதல் அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கணையான ரயானா பர்னாவி, சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், ஏ.எக்ஸ்-2 விண்வெளி பயணத்தில் இணைய உள்ளதாக சவூதி அரேபியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது.
சவூதி மன்னர் முகமது சல்மான் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிரமங்களை சந்தித்ததன் காரணமாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் முன்பு இருந்தன. ஆனால் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக வந்த முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
இதன் காரணமாக சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளவும், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு முன்னதாக பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி கொடுத்த சவூதி அரேபியா அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணத்திற்கான அனுமதி வழங்கியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
அதேபோல் 1985ம் ஆண்டு, சவூதி இளவரசரும், ஒரு விமானப்படை விமானியுமான சுல்தான் பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அமெரிக்கா ஏற்பாடு செய்த விண்வெளிப் பயணத்தில் பங்கேற்று, விண்வெளிக்குச் சென்ற முதல் அரபு இஸ்லாமியர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.