தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியாக வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவலிங்கமும், ஏனைய விக்கிரகங்களும் இடித்தழிக்கப்பட்ட செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் பல்வேறு அமைப்புக்களால் போராட்டம் நடத்தி வருகிற்மை குறிப்பிடத்தக்கது.