வவுனியா-வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமான பர்வத விகாரை (Waddamana Parwatha Viharaya) என பௌத்த விகாரையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பின்னர் மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் 2018இல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபடத் தடை விதித்தனர்.
இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்லியல் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர்.
இதற்கிடையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்துள்ளன.
இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வடமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.