நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரவு பண்டாரவளை, லியங்கஹவெல, கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 62 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பூனாகலை கீழ் பகுதியில் உள்ள கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவில் காயமடைந்த 5 பேரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொஸ்லந்த ஆதார வைத்தியசாலை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவினால் மூன்று வீடுகளும் ஒரு கடையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதன்போது மூன்று பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் இந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததாக பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபான தெரிவித்தார்.