எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக சாமர குணசேகர என்பவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் சாட்சியம் கிடைக்கவில்லை என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏதாவதொரு வழிமுறையில் தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் துறை தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு ஏற்க வேண்டும்.இல்லாத அதிகாரத்தை இவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குறித்த கப்பல் தரப்பினரால் இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,ஆனால் அதற்கு சாட்சியம் கிடைக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதிராக அரசியல் மட்டத்தில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் நபர் தொடர்பில் குறிப்பிடுவதற்கு அச்சமடைய போவதில்லை.
சாமர குணசேகர என்பவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.