கோடை காலத்தில் கருப்பு சட்டை (கவுன்) அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்களித்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவரும் கருப்பு – வெள்ளை உடைக்கு மேல், கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்றை அணிந்து ஆஜராக வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற சட்டத்தரணிகள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்திடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாலார் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் முதல் ஜூன் 30ம் திகதி வரை கருப்பு கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.