2023 ஆம் ஆண்டு ‘புத்த ரஷ்மி’ வெசாக் தேசிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொழும்பு கங்காராமய விகாரைக்கு அருகாமையில் , பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் கண்காட்சி கூடம் ஒன்றை அமைத்துள்ளது.
இதன் ஆரம்பக் கட்ட அங்குரார்பணத்தை கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
பாகிஸ்தான் கண்காட்சி கூடத்தினை ஜனாதிபதி ரணில் மற்றும் உயர்மட்ட பிரமுகர்கள் பார்வையிட்டதோடு பாகிஸ்தான் தூதரகத்தின் ‘பார்வையாளர்கள்’ புத்தகத்தில் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும், அனைத்து பார்வையாளர்களாலும் பாகிஸ்தானின் இம்முயற்சியானது பாராட்டப்பட்டது. பாகிஸ்தான் கண்காட்சி கூடமானது பாகிஸ்தானின் புத்த பாரம்பரியத்தை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது.
உண்ணாவிரத நிலை புத்தர் சிலைகள், பிரச்சார நிலை புத்தர் சிலைகள், தியான நிலை புத்தர் சிலைகள் மற்றும் பாகிஸ்தான் காந்தார நாகரிகத்திற்கு சொந்தமான பல கலைப்பொருட்களின் பிரதிகள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், பல தசாப்தங்களாக அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான பௌத்த தொல்பொருள் இடங்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
2023 ஆம் ஆண்டானது, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டைக் குறிக்கும் நிலையில் இந்த ஆண்டு வெசாக் பண்டிகை கொண்டாடப்படுவது இரு நட்பு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
கொழும்பு சிட்டி சென்டர் வளாகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பாகிஸ்தான் கண்காட்சி கூடமானது மே மாதம் 5 முதல் 7 வரை தினமும் இரவு 7:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.