ஜப்பானில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸி ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்துவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 அமைப்பை உருவாக்கியுள்ளன.
ஜி7 அமைப்பின் 49-வது உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அவுஸ்திரேலியா, இந்தியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
இதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று ஹிரோஷிமோவுக்கு விஜயம் செய்கிறார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கையில்,
ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸி ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்தை நடத்துவார். குவாட் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் இதர உறுப்பினர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஜனாதிபதி பைடனுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பைடன் பொறுப்பேற்றதில் இருந்து நட்பு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். ஜி7 கூட்டத்தில் அவரது கடின உழைப்பு நமது நாடுகளை மேலும் ஒன்றிணைக்கும் என தெரிவித்தார்.
சுத்தமான எரிசக்தி திட்டத்துக்கு மாறுவதை துரிதப்படுத்த, தைரியமான நடவடிக்கை எடுப்பது பற்றியும், பருவநிலை பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றியும் ஜி7 கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு ஜான் கிர்பி குறிப்பிட்டார்.