மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் இன்றும் (12) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலவும் மோச்சா(Mocha) சூறாவளியின் தாக்கத்தால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தென் கடற்பிராந்தியங்களிலும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சுறாவளியால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பலத்த மழை காரணமாக அத்தனகல ஓயா, களனி, களு மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் குறித்த ஆறுகளின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மழை காரணமாக கொழும்பு, மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.