ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தேச ‘புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்’ கீழ், ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் அலரிமாளிகை கட்டிடம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா தலங்களாக பாதுகாக்கப்படும் என்றார்.
இதனடிப்படையில், கொழும்பு நகரில் உள்ள மற்ற கட்டிடங்கள் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, பொது தபால் நிலையம், வெளிவிவகார அமைச்சு கட்டிடம், பொலிஸ் தலைமையகம், விமானப்படை தலைமையகம், கடற்படை தலைமையகம், விசும்பய, ஷ்ரவஸ்தி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுதி), கஃபூர் கட்டிடம், ஜவத்தை வீதியிலுள்ள நீர்ப்பாசன திணைக்கள கட்டிடம், வெலிக்கடை சிறைச்சாலைகள் மற்றும் பழைய பாதுகாப்பு காலி முகத்திடலில் உள்ள அமைச்சுக் கட்டிடம் என்பன குத்தகைக்கு விடப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.