இஸ்லாத்தின் ஐந்தாவதும் மற்றும் இறுதியுமான கடமையான ஹஜ் யாத்திரை சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் ஆண்டுதோறும் 5 நாட்கள் புனித ஹஜ் யாத்திரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்காவுக்கும் அவரது அடக்கஸ்தலம் அமைந்துள்ள மதினாவுக்கும் புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று சவூதி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
மக்கா நகரில் உள்ள புனித கஃபாவில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது கிரியைகளை முடித்துக் கொண்ட யாத்திரிகர்கள், மினா நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அங்குள்ள கடமைகளை நிறைவேற்றிவிட்டு அரபா மலைக்குச் சென்று தொடர்ந்து ஷைத்தானுக்குக் கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் இம்முறைய ஹஜ் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ‘இந்த ஆண்டு, வரலாற்றில் மிகப்பெரிய ஹஜ் யாத்திரையை நாங்கள் காணவுள்ளோம்.
2020 முதல் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான ஹஜ், ஜூன் 26 முதல் ஜூலை 1 வரை நடைபெறுகிறது. ஈத் அல்-அழ்ஹா பெருநாள் சவூதி அரேபியாவில் ஜூன் 28 அன்று இடம்பெறும்.
போர், வறுமை அல்லது ஆக்கிரமிப்பால் முற்றுகையிடப்பட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து வந்தாலும் கூட புனித ஹஜ் பயணம் பலருக்கு நம்பிக்கையைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாக சிறிது சிறிதாகச் சேமித்த பணத்தை வைத்து இந்த புனித பயணத்தை மேற்கொள்ளும் பலரும் இந்த ஹஜ்ஜில் கலந்து கொள்கின்றார்கள்.